ஐ.பி.எல். பிக்ஸிங் முறைகேட்டை எந்த குழு விசாரிப்பது? தீர்ப்பை ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம்
டெல்லி: 6வது ஐ.பி.எல். போட்டிகளில் நிகழ்ந்த பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான புகாரை எந்த குழு விசாரிப்பது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
6வது ஐ.பி.எல். போட்டிகளில் பிக்ஸிங் விவகாரம் பெரும் பிரளயத்தை கிளப்பியது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும் நீதிபதி முத்கல் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்தது.
அக்குழுவும் தமது விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசன் உட்பட 13 பேர் மீது புகார் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. தற்போது ஐ.பி.எல். நடைபெறும் காலத்தில் சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராகவும் நியமித்தது.
இதன் பின்னர், சீனிவாசன் உட்பட 13 பேர் மீதான புகாரை விசாரிக்க ஒரு குழுவை அமைக்குமாறு கிரிக்கெட் வாரியத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. கிரிக்கெட் வாரியமும் ரவிசாஸ்திரி உள்ளிட்ட மூவரது பெயரை பரிந்துரைத்தது.
ஆனால் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்புடைய மூவரையும் விசாரணைக் குழுவினராக ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அத்துடன் நீதிபதி முத்கல் கமிட்டியே தொடர்ந்து விசாரணை நடத்தலாம் எனவும் கூறியது. இதை நீதிபதி முத்கல் கமிட்டியும் ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில் நீதிபதி முத்கல் கமிட்டி இந்த விசாரணையை நடத்தக் கூடாது என்றும் புதிய விசாரணை குழுவை அமைக்க தயார் என்றும் உச்சநீதிமன்றத்தில் இன்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்த விசாரணையின் போது கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் சீனிவாசன் நீடிப்பது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
மேலும் சீனிவாசன் உட்பட 13 பேர் மீதான புகாரை எந்த குழுதான் விசாரிப்பது என்பது தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.