ஜெ. கைரேகை வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி... ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்தது!
Recommended Video
டெல்லி: ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க பெங்களூரு சிறையில் இருந்து கைரேகையை பெறுமாறு சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் சென்னை ஹைகோர்ட்டில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் கைரேகை வேட்பாளர் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதா சுயநினைவில்லாத நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனையே கூறியுள்ள நிலையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆவண படிவத்தில் மருத்துவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது.
ஜெயலலிதாவின் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று சரவணன் தனது மனுவில் கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது பெங்களூர் சிறை பதிவேடுகளில் இருக்கும் ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறிய சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
மேலும், பெங்களூர் சிறையிலிருந்து பெறப்பட்ட கைரேகையை திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.