வார்டன் திட்டியதால் விபரீத முடிவெடுத்த மாணவன்! திட்டுவது தற்கொலைக்கு தூண்டுவதாகாது.. கோர்ட் அதிரடி!
டெல்லி: விடுதியில் தவறு செய்த மாணவனை வார்டன் திட்டிய நிலையில் அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திட்டுவது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது என்றும், மாணவரை திட்டினால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என சாதாரண மனிதனால் நினைத்து பார்க்க முடியாது என கூறி இருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் ஆசிரியர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
அப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி நிர்வாகியான ஒருவர் அதே பள்ளியின் விடுதி கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறார்.

இதற்கிடையே அந்த விடுதியில் தங்கி படித்த மாணவன் ஒருவன் தவறு செய்ததாக மற்றொரு மாணவன் விடுதி கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தொடர்பாக விசாரித்த விடுதி கண்காணிப்பாளர் அந்த மாணவனை அழைத்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக விடுதிக் காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதி கண்காணிப்பாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து விடுதி கண்காணிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் அமானுல்லா, பிரசாந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது விடுதி கண்காணிப்பாளர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கும் தடை விதித்தனர். தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள்," திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது. இந்த வழக்கை முழுமையாக பரிசீலித்த போது மாணவன் விவகாரத்தில் விடுதி காப்பாளர் தலையிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. விடுதிக் காப்பாளர் திட்டியதற்கு மற்றொரு மாணவனின் புகாரின் பெயரில் தான் அவர் திட்டி இருக்கிறார்.
ஆனால் இது போன்ற ஒரு துயரம் நடக்கும் என்பதை ஒரு சாதாரண மனிதனால் நினைத்துப் பார்க்கவே முடியாது. தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்கு எதிரான மற்றொரு மாணவரின் புகாரில் தான் அவரை திட்டியுள்ளார். இதுவும் மிகக் குறைந்த நடவடிக்கை தான். அதன் மூலம் புகாருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளர் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே அவரை வழக்கிலிருந்து விடுவிக்கிறோம் என கூறி இருந்தனர்.
முன்னதாக வழக்கு விசாரணை நடந்த போது தற்கொலை செய்து கொண்ட மாணவர் மீண்டும் அதே போன்று தவறு செய்யாமல் இருப்பதற்காகவே நிர்வாகி அவரை திட்டியதாகவும், இருவருக்கும் இடையே எந்தவித தனிப்பட்ட பகையோ, முன் விரோதமோ இல்லை என எடுத்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications