சீனாவுக்கு செக் வைக்கும் திட்டம்? 13,000 அடி உயரத்தில் சேலா சுரங்கப்பாதை.. தெரிய வேண்டிய 5 விஷயங்கள்
இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று ரூ.825 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகிலேயே மிக நீளமான, 13,000 அடி உயரத்தில் இந்திய சீனா எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை என்னென்ன சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்று இங்கே பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சென்றார். அங்கு அவர் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், அங்கு நடைபெற்ற 'விக்சித் பாரத், விக்சித் வடகிழக்கு' நிகழ்ச்சியில், பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். பின்னர் கடந்த 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணி தொடங்கப்பட்ட, உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது ரூ.815 கோடி செலவில் கட்டப்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கை இணைக்கும் இது 'சேலா' சுரங்கப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்திய சீன எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை பாதுகாப்பு ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதையின் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
2 சுரங்கங்கள், ஒரு இணைப்பு சாலை: சேலா சுரங்கப்பாதைதான் உலகிலேயே மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையாகும். 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதை அனைத்து தட்பவெப்ப நிலையிலும் தடையின்றி பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தை இணைக்கும் பலிபாரா- சரிதுவார் - தவாங் கடுமையான பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு இருக்கும் என்பதால், இந்த சுரங்கப்பாதை மூலம் அருணாசல பிரதேத்திற்கு அனைத்து காலங்களிலும் தடையின்றி செல்ல முடியும்.
பிஆர்ஓ எனப்படும் எல்லை சாலை அமைப்பு மூலம் இந்த சாலை திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு சுரங்கங்கள் மற்றும் ஒரு இணைப்பு சாலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. முதல் சுரங்கம் 980 மீட்டர் நீளத்தில் சிங்கிள் டியூப் சுரங்கம் ஆகும். மற்றொரு சுரங்கம் 1,555 மீட்டர் தொலைவில் இருவழிபாதை சுரங்கமாக உள்ளது. ஒரு இணைப்பு சுரங்கசாலை அவசா கால சேவைகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த சுரங்கப்பாதைகளுக்கு இடையேயான இணைப்புச் சாலை 1,200 மீட்டர் நீளம் கொண்டது ஆகும்.
24 மணி நேர கண்காணிப்பு: கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி இந்த சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 90 லட்சம் மனித நேரம் இந்த சுரங்கப்பாதை கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக முழு வீச்சில் தினமும் சுரங்கப்பாதையின் கட்டுமான பணி நடைபெற்றது. 650 தொழிலாளர்கள் தினமும் பணியில் ஈடுபட்டனர்.
71 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்டுகள், 5 ஆயிரம் மெட்ரிக் டன் இரும்பு பொருட்கள், 800 மெட்ரிக் டன் வெடிபொருட்கள் இந்த சுரங்கப்பாதை அமைக்க பயன்படுத்தப்பட்டது. சேலா சுரங்கப்பாதையில் பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன. அதாவது, காற்றோட்டமாக இருக்க ஜெட் ஃபேன் , தீ அணைப்பு கருவிகள், 24 மணி நேர கண்காணிப்பு, தீவிர பாதுகாப்பு ஆகியவையும் சுரங்கப்பாதையில் ஏற்படுத்தப்பட உள்ளன.
சீன - இந்திய எல்லைப்பகுதி: சேலா கணவாய்க்கு மேலே 400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கம் மூலம் குளிர் காலத்திலும் எந்த சிரமும் இன்றி பயணிக்க முடியும். சீன - இந்திய எல்லைப்பகுதிக்கு வீரர்கள் ராணுவ தளவாடங்களுடன் விரைவாகவும் தடையின்றி பயணிக்கவும் இந்த சுரங்கம் உதவும். அதி நவீன ராணுவ வாகனங்களையும் இக்கட்டான நேரத்தில் எல்லைக்கு உடனடியாக கொண்டு செல்ல முடியும்.
அருணாசல பிரதேசத்தை பொறுத்தவரை சீனாவின் எல்லையில் அமைந்துள்ளது. அருணாசல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா வாலாட்டிக்கொண்டு இருப்பதால், எல்லையில் அடிக்கடி பதற்றமான சூழல் ஏற்படுகிறது. இதனால், அருணாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை.. பாதுகாப்பு ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications