சரிந்த 6 மாடி கட்டிடம்! ஒருவர் பலி.. பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்.. குஜராத்தில் ஷாக்
சூரத்: குஜராத்தின் சூரத் அருகே 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 15 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தற்பொது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
குஜராத்தின் தொழில நகரம் என்று அழைக்கப்படும் சூரத் அருகே உள்ள சச்சின் பாலி என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அப்படியே சீட்டுக்கட்டு போல 6 மாடி கட்டிடம் தரைமட்டமானது. கட்டிடம் இடிந்து விழுந்த தகவல் உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு பணியினருடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் 5 முதல் 6 குடும்பம் வசித்து வந்தாக சொல்லப்படுகிறது. ஒருவர் பலியாகியுள்ளார். 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு காவல் துறை உயர் அதிகாரிகளும் துணை மேயர் நரேந்திர பாட்டீலும் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். கட்டிடத்தில் ஏதேனும் விதி மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கட்டிடம் சேதமுற்று இருந்ததாகவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு தாங்க முடியாமல் கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சூரத் நகரின் காவல் ஆணையர் கூறுகையில், "இன்று மாலை 3 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டிடத்தில் 30 பிளாட்கள் உள்ள நிலையில், 4 முதல் 5 பிளாட்களில் மட்டுமே மக்கள் வசித்து வந்துள்ளனர். பிற பிளாட்கள் அனைத்தும் காலியாக இருந்துள்ளது. 5 - 6 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சுகிறோம்" என்றார்.











Click it and Unblock the Notifications