இடைத்தேர்தல் தோல்விக்கு பீகார் பாஜகதான் பொறுப்பு: ஷா நவாஸ் உசேன்
டெல்லி: பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தல் தோல்விக்கு அம்மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகளே பொறுப்பு என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறியுள்ளார்.
சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஷா நவாஸ் உசேன் கூறியதாவது:
பீகார் சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளை மட்டுமே பாரதிய ஜனதா இழந்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த இழப்பை ஈடுசெய்வோம்.
பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் பீகார் இடைத்தேர்தலில் முழு வீச்சில் வாக்களிக்க முடியாமல் போனது, கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம். இத்தோல்விக்கு மாநில பாஜகதான் காரணம்.
இடைத்தேர்தல் பின்னடைவு காரணமாக பா.ஜ.க. தேசிய தலைவர்களின் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது.
இடைத்தேர்தலுக்கு தேசிய தலைவர்கள் யாரும் பீகாருக்கு வந்து பிரசாரம் செய்யவில்லை. பீகார் இடைத்தேர்தல் முடிவுகளை பரிசீலிப்பதுடன், சட்டசபை தேர்தலில் வெற்றி பெறத் தேவையான நடவடிக்கைகளை கட்சித் தலைமை எடுக்கும்
இவ்வாறு ஷாநவாஸ் உசேன் கூறினார்.
சந்திரபாபு நாயுடு
இதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் உண்மை நிலையை பிரதிபலிப்பதில்லை என்று கூறியுள்ளார்.