தெலுங்கானாவால் மத்திய அரசுக்கு ஆபத்து... முன்கூட்டியே தேர்தல் வரலாம்: சரத்பவார் கணிப்பு
மும்பை: மத்திய அரசு ஆபத்து நிலையில் இருப்பதால், முன்கூட்டியே தேர்தல் வரலாம். எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்குத் தயாராகுங்கள் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார்.
மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் வரை அதன் ஆட்சிக்காலம் இருக்கிறது. எனவே, அடுத்தாண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மத்திய ஆளும் கூட்டணி அரசில் தேசிய வாத காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் மராட்டிய துணை முதல்வர் அஜித்பவார் வீட்டில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

அதில், தெலுங்கானா விவகாரத்தால் முன்கூட்டியே தேர்தல் வரலாம், அதற்கு தயாராகுங்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார்.

மேலும், இது குறித்து கூட்டத்தில் சரத்பவார் பேசியதாவது, ‘தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சீமந்திரா பகுதியை சேர்ந்த 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நிலமை மிகவும் மோசமாக உள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பிறகு எந்த நேரத்திலும் பாராளுமன்ற தேர்தல் வரலாம். இதனால் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலுக்கு தயாராகுங்கள்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications