கேரள ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஷீலா தீட்சித்? ராஜ்நாத்சிங்குடன் திடீர் சந்திப்பு
டெல்லி: கேரள ஆளுநரும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை பதவி விலக பாஜக தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. சில கவர்னர்கள் ராஜினாமா செய்த நிலையில், பதவி விலக விரும்பாதவர்கள் 'பணியிடமாற்றத்துக்கு' உள்ளாகினர். அப்படியும் அசராமல் இருந்த, புதுச்சேரி கவர்னர் வீரேந்திரகட்டாரியா, மிசோராம் கவர்னர் கமலா பெனிவால் போன்றோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லி முதல்வராக இருந்தபோது காமன்வெல்த் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய ஷீலா தீட்சித் தற்போது, கேரள ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை நீக்க மத்திய அரசு விரும்புவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், டெல்லிக்கு இன்று வந்த ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் சுமார் கால்மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாகவும் ஷீலா தீட்சித் தெரிவித்தார். எனவே, ஷீலா தீட்சித் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், "இப்போதைக்கு எனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை" என்று தங்கள் சேனலுக்கு ஷீலா தீட்சித் தெரிவித்ததாக ஆங்கில செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications