9ஆம் வகுப்பு சிறுமிக்கு குழந்தை: பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனைத் தலைவர் கைது
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிவசேனைக் கட்சித் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிவசேனைக் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக இருப்பவர் வசுதேவ் நம்பியார். தாணேவில் உள்ள கஷிமிரா நகரத்தில் இவருக்கு சொந்தமாக ஒரு பள்ளியும், கோவிலும் உள்ளன.
அந்தப் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தாணே மாவட்டத்தின் மிரா கிராமத்தில் உள்ள ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அந்தச் சிறுமியை வசுதேவ் நம்பியார் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இதுகுறித்து வெளியில் கூறினால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி அந்தச் சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த அந்தச் சிறுமிக்கு கடந்த வாரம் குறைமாதக் குழந்தை ஒன்று பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தெரிவித்ததை அடுத்து நம்பியார் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நம்பியாருக்கு, இம்மாதம் 11ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டது என்று கஷிமிரா காவல்நிலைய ஆய்வாளர் அனில் கதம் கூறியுள்ளார்.