ஜல்லிக்கட்டு எழுச்சி எதிரொலி..ரேக்ளா பந்தயத்துக்கு தடையை நீக்க சிவசேனா போர்க்கொடி
மும்பை: ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் எழுச்சி மிகு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மஹாராஷ்டிராவில் மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகள் வதைக்கப்படுவதாக கூறி பிராணிகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதித்தது. ரேக்ளா பந்தியத்தில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டி, ரேக்ளா பந்தயங்கள் நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் எழுச்சி போராட்டத்தால் மிரண்டு போன மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் அவசர சட்டத்தை பிறப்பித்தார். இதையடுத்து நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நிரந்தர சட்டம் இயற்றும் வரை வாடி வாசல் அருகே யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அலங்காநல்லூர் மக்கள் தெரிவித்தனர். போராட்டத்தின் தீவிரம் கருதி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தநிலையில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி போர்க்குரல் எழுப்பியுள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்ததலைவரும், ஷிரூர் தொகுதி எம்.பி.யுமான சிவாஜிராவ் அதால்ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ்நாட்டை பொறுத்த வரையில் அங்குள்ள முதல்வர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நிர்வாகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியைக்கூட ஜல்லிக்கட்டுக்காக தமிழக முதல்வர் சந்தித்தார்.
தமிழகத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பிரதமர் மோடியைச் சந்தித்து, மாட்டுவண்டிப் பந்தயம் நடத்த அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications