தியேட்டர்களில் மராத்தி படம் கட்டாயம்.. டிவிட்டரில் விமர்சித்த எழுத்தாளருக்கு நெருக்கடி!
மும்பை: மகாராஷ்டிராவிலுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள்ளான ரசிகர்கள் அதிகம் வவரும் நேரத்தில் மராத்தி திரைப்படத்தை காண்பிக்க வேண்டும் என்ற மாநில அரசு உத்தரவை விமர்சனம் செய்திருந்தார் எழுத்தாளர் ஷோபா டே. இதனால் அவருக்கு எதிராக சட்டசபையில் உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்துள்ளார் சிவசேனை எம்.எல்.ஏ.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவிலுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில், ஏதாவது ஒரு ஸ்கிரீனில் மாலை 6 மணி முதல் 9 மணிவரையிலான நேரத்தில் மராத்தி படத்தை மட்டுமே காட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

இதை ஷோபா டே எதிர்த்து தனது டிவிட்டரில் கருத்து கூறியிருந்தார். நான் எதை பார்க்க வேண்டும் என்பதை பட்னாவிஸ் தீர்மானிக்க கூடாது என்றும், இது குண்டாகிரி என்றும் பல டிவிட்டுகளில் திட்டியிருந்தார்.
அரசு எடுத்த முடிவை மோசமாக விமர்சனம் செய்து, சட்டசபையின் மாண்பை ஷோபா டே கெடுத்துவிட்டதாக கூறி சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்துள்ளார். இதுகுறித்து ஷோபா டே கூறுகையில், மராட்டிய திரைப்படங்கள் மீதும், அம்மாநிலத்தின் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.
உரிமைமீறல் பிரச்சினையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், ஷோபா டே, சட்டசபைக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார். அவருக்கு எந்த மாதிரி தண்டனை அளிப்பது என்பதை சபாநாயகர் முடிவு செய்வார்.












Click it and Unblock the Notifications