சிக்கிம் மாநிலத்தில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை.. பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கா? பரபரக்கும் களம்
காங்டாக்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தைப் போலவே நாட்டின் வடகிழக்கே இருக்கும் மற்றொரு குட்டி மாநிலம் தான் சிக்கிம். இந்த மாநிலத்திற்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.

சிக்கம் தேர்தல்: சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 32 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்குக் குறைந்தது 17 தொகுதிகளில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிக்கும். அங்குப் பல காலமாகவே தேசிய கட்சிகளுக்கு இடமில்லை. சிக்கிம் ஜனநாயக முன்னணி மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சிகளுக்கு இடையே தான் அங்குப் போட்டி நிலவுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் முதலில் ஜூன் 4ஆம் தேதியே தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அம்மாநிலச் சட்டசபை ஜூன் 2ஆம் தேதியுடன் நிறைவடைவதால் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2இல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஜூன் 2ஆம் தேதி காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 32 தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒரே நேரத்தில் காலை 6 மணிக்கு எண்ணப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கை: இது குறித்து அம்மாநில தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், "இந்த முறை 32 தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் தபால் வாக்குகள் மற்றும் இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண உள்ளோம். 32 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை 32 மையங்களில் நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் பிற்பகலில் முடிவு தெரிந்துவிடும்" என்றார்
இந்த ஜூன் 2ஆம் தேதி சிக்கிம் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. அதே நேரத்தில் சிக்கிமின் ஒரே லோக்சபா தொகுதிக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் வழக்கம் போல ஜூன் 4ஆம் தேதியே எண்ணப்படும்.
சிக்கம் மாநிலம்: சிக்கிமில் 4.66 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், சட்டசபைத் தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவானது. அங்குள்ள 32 சட்டசபை தொகுதிகளில் 146 வேட்பாளர்களும், ஒரே மக்களவைத் தொகுதியில் 14 போட்டியாளர்களும் களத்தில் உள்ளனர்.
கடந்த தேர்தல்: சிக்கிம் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கு பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. கடந்த 2019 தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சரியாகப் பெரும்பான்மைக்குத் தேவையான 17 இடங்களில் வென்றது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வென்று 2 இடங்களில் பெரும்பான்மையைத் தவறவிட்டது.
அதன் பிறகு சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகிய நிலையில், இடைத்தேர்தல் நடந்தது. அதில் 8 இடங்களில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications