நீ சிங்கம் போலீஸ்னா.. நான் "புஷ்பா.!" வீடு புகுந்து எச்சரித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு திரிணாமுல் பதிலடி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள 'சிங்கம்' vs 'புஷ்பா' மோதல் பேசுபொருளாக மாறியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் ஒருவர், வேட்பாளரின் வீட்டுக்கே சென்று எச்சரிக்கை விடுத்ததும், அதற்கு வேட்பாளர் சினிமா பாணியில் பதிலடி கொடுத்ததும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நாளைய தினம் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு மாநிலம் முழுக்க தேர்தல் கண்காணிப்பாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கம் போலீஸ்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2011 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இந்த அஜய் பால் சர்மா, 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்றும் 'சிங்கம்' என்றும் அழைக்கப்படுகிறார். இதற்கிடையே ஃபால்டா பகுதியில் திரிணாமுல் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் ஆட்கள் வாக்காளர் அடையாள அட்டைகளைச் சேகரிப்பதாகவும், வாக்காளர்களை மிரட்டுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து அஜய் பால் நேரடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
நேற்று திங்கள்கிழமை நேரடியாக ஜஹாங்கீர் கானின் இல்லத்திற்குச் சென்ற அஜய் பால் சர்மா, அங்குள்ள அவரது உறவினர்களிடம், "ஜஹாங்கீரிடம் சொல்லிவிடுங்கள்... மக்கள் மிரட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. யாராவது தவறு செய்ய முயன்றால் அல்லது வாக்காளர்களைத் துன்புறுத்தினால், நாங்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுப்போம்.. அது கடுமையானதாகக் கூட இருக்கலாம்" என எச்சரிக்கை விடுத்தார்.
"புஷ்பா" திரிணாமுல் வேட்பாளர்
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் வேட்பாளர் ஜஹாங்கீர் கான், "இது வங்காளம் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.. அவர் 'சிங்கம்' என்றால், நான் 'புஷ்பா'. பாஜகவால் பணியமர்த்தப்பட்ட உத்தரப் பிரதேச அதிகாரிகளின் மிரட்டல்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். போலீஸ் படையுடன் வந்து எனது குடும்பத்தினரையும் கட்சியினரையும் அவர் மிரட்டுகிறார். ஜனநாயகத்தில் இது ஏற்க முடியாதது" என ஆவேசமாகப் பேசினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஃபால்டா பகுதியில் பதற்றம் அதிகரித்தது. அஜய் பால் சர்மாவின் பாதுகாப்பு வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடந்தபோது, திரிணாமுல் ஆதரவாளர்கள் 'ஜெய் பங்களா' முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஆர்பிஎஃப் வாகனங்களை வழிமறித்துத் தொண்டர்கள் கோஷமிட்டதால் அந்த இடமே போர்க்களமானது.
புகார்
நிலைமை இப்படியிருக்க, இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பமாக அஜய் பால் சர்மா மற்றும் மத்தியப் படையினர் மீது ஃபால்டா போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "அதிகாரிகள் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களைத் தாக்கி, முறையற்ற வகையில் நடந்துகொண்டனர்" எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கடும் கண்டனம்
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்களும் இந்த விவகாரத்தில் அதிகாரியின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளனர். மேற்கு வங்க அமைச்சர் சந்திரா பட்டாச்சார்யா கூறுகையில், "அவரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்கள்.. தேர்தல் பணிக்கு அதுபோன்ற அதிகாரி எதற்குத் தேவை? நள்ளிரவில் ஒருவரது வீட்டிற்குச் சென்று மிரட்டல் விடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அமைதியைக் குலைக்கவே அவர் இங்கு வந்துள்ளார்" என்றார்.
மற்றொரு அமைச்சரான அரூப் பிஸ்வாஸ், "கண்காணிப்பாளர்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கட்சியைக் குறிவைத்துச் செயல்படுவதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்" என எச்சரித்தார். இதற்கிடையே, திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, அஜய் பால் சர்மா நடனமாடும் பழைய வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, "உங்கள் போலீஸ் திறமை, உங்கள் நடனத் திறமையை விடச் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்" எனக் கிண்டலடித்துள்ளார்.














Click it and Unblock the Notifications