கலவரம் குறித்து தவறான செய்தி: சன் டிவி நிர்வாகத்துக்கு சிங்கப்பூர் தூதரகம் கடிதம்!

இதே காரணத்துக்காக சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸாரிடம் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திலிருந்து சன் டிவி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்:
"சன் டிவியில் கடந்த ஒன்பதாம் தேதி மாலை 7 மணி செய்தியில் சிங்கப்பூரில் எட்டாம் தேதி இரவு நடந்த கலவரம் குறித்து செய்தி ஒளிபரப்பாகியது.
அந்தச் செய்தியில் கீழ்கண்ட பொய்யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன:
* இந்தியர் ஒருவர் பேருந்திலிருந்து கீழே தள்ளப்பட்டார்
* சிங்கப்பூர் மக்களும், சீனர்களும் இந்தியத் தமிழர்களை தாக்கினார்கள்
* அவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவோம் அல்லது போலீஸ் பிடித்து துன்புறுத்தும் என்று பயந்து இந்தியத் தமிழர்கள் வீடுகளினுள்ளே அடைந்து கிடக்கிறார்கள்.
- இப்படி அந்த செய்தியில் சொல்லப்பட்ட எதுவுமே உண்மையில்லை. கண்ணால் கண்ட சாட்சிகள் மற்றும் விடியோ பதிவுகளின் படி, உண்மையில் நடந்தது இதுதான்:
பேருந்து ஏற்கனவே நிரம்பி வழிந்திருந்தும் குறித்த நபர் பேருந்தில் ஏற முயன்றிருக்கிறார். அந் நேரத்தில் அவர் நிரம்ப மது அருந்தியிருந்திருக்கிறார். சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததுமில்லாமல், பேருந்தினுள் தனது கால்சட்டையை கழட்டவும் செய்திருக்கிறார்.
அவரை ஒருவழியாக பேருந்திலிருந்து இறக்கி விட்டும் கூட, பேருந்து கிளம்பியவுடன் அதனுடனே தள்ளாட்டத்துடன் நழுவி விழுந்து கொண்டிருந்த கால் சட்டையையும் கூட தாங்கிப் பிடித்தவாறு ஓடி வந்திருக்கிறார்.
அப்போது தடுமாறி பேருந்தின் பின் சக்கரத்துக்கு முன் விழுந்ததினால் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியிருக்கிறது.
இதனைக் கேள்விப்பட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனம் அங்கே சென்ற போது சுமார் 100 பேர் கொண்ட கும்பல் அங்கே சூழ்ந்து கலவரத்தை உண்டு செய்தார்கள். அது சுமார் 400 பேர் கொண்ட கும்பலாக அதிகரித்தது.
சிங்கப்பூர் போலீஸ் கலவரத்தைக் கட்டுபடுத்தினார்கள். இதுவரை 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை விசாரித்து வருகிறது. சம்பவம் நிகழ்ந்த பேருந்தின் ஓட்டுனரும் எச்சரிக்கையின்றி பேருந்தை ஓட்டிய குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் குறித்த சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இணைய தள விபரங்களும் அந்தக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள் எதையுமே கண்டு கொள்ளாமல், அல்லது இது குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ, சிங்கப்பூர் அரசிடமோ கேட்டறியாமல் தவறான செய்தியை சன் டிவி வெளியிட்டது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக மறுப்புச் செய்தியை சன் டிவி தனது டிவி ஒளிபரப்பிலும், இணைய தளத்திலும் ஒளிபரப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
-இவ்வாறு அக்கடிதத்தில் சிங்கப்பூர் தூதர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications