மம்தா பானர்ஜிக்கு விழுந்த அடி.. டாடா நிறுவனத்துக்கு ரூ.766 கோடி வழங்க உத்தரவிட்ட நடுவர் மன்றம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையே இருந்த சிங்கூர் நானோ திட்ட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மேற்கு வங்க மாநில தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் வட்டியுடன் ரூ.766 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2006ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்தது. புத்ததேவ் பட்டாச்சாரியா முதல்வராக இருந்தார். இந்த சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் டாடா நிறுவனம் தனது மலிவு விலை ‛நானோ' கார் உற்பத்தி ஆலையை தொடங்க முடிவு செய்தது.

இதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் 1000 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டுமான பணி தொடங்கியது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி விறுவிறுப்பாக ஆரம்பித்தது. அப்போது விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு அப்போது எதிர்க்கட்சி தலைவியாக இருந்த தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை சிங்கூரில் அமையக்கூடாது என அவர் போர்க்கொடி தூக்கினார். மேலும் மம்தா பானர்ஜி காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். இது மாநில அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆலை சிங்கூரில் நிறுவுவதை கைவிட்டு குஜராத்துக்கு இடம்பெயர்ந்தது. இதற்கிடையே தான் மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் ஆட்சி மாற்றம் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்றார். இதையடுத்து சிங்கூரில் நிலம் கையப்படுத்தும் விஷயத்துக்காக டாடா நிறுவனம் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு இடையே சட்ட போராட்டம் தொடங்கியது.
நிலம் கையகப்படுத்திய நிலத்தை தன்னிடம் வழங்க டாடா நிறுவனம் கூறியது. அதற்கு மம்தா அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இல்லாவிட்டால் சிங்கூரில் தொழிற்சாலை அமைப்பதற்கான மூலதன முதலீடு செய்துள்ளதாகவும், இதனால் இழப்பு ஏற்பட்டுள்ளது, இந்த இழப்பை மேற்கு வங்க மாநில தொழில்துறை மேம்பாட்டு கழகத்திடம் இருந்து வசூலித்து வழங்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை தொடர்ந்து 3 நீதிபதிகள் கொண்ட நடுவர் மன்றத்துக்கு சென்றது.

இந்நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு மேற்கு வங்க மாநில தொழில்துறை மேம்பாட்டு கழகம் வட்டியுடன் ரூ.766 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு முதல் 11 சதவீத வட்டியுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த தொகை வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு வழக்கு தொடர்பான செலவுக்காக ரூ.1 கோடியை வசூலிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தமட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டம் என்பது அவரை இன்னும் பிரபலமாக்கியது. இந்நிலையில் தான் தற்போது மம்தா பானர்ஜி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு வங்க மாநில தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.766 கோடியை டாடா நிறுவனத்துக்கு வழங்க நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications