ஓடும் காரில் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்! டெல்லியில் மீண்டும் அட்டூழியம்
டெல்லி: ஓடும் காரில் வைத்து ஏழாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆறு பேர் கொண்ட கும்பலில், ஐந்து பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்துள்ளனர்.
14 வயதாகும் அந்த மாணவி டெல்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் சிறுமியின் குடும்ப நண்பர்கள் இருவர் சிறுமியை சந்தித்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி கார் ஒன்றில் ஏற்றியுள்ளனர்.
அந்த காரில் மேலும் 4 பேரும் இருந்துள்ளனர். இந்த ஆறு காமக்கொடூரர்களும், ஓடும் காரில் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான கார் நடமாட்டத்தை கண்காணித்த போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று, இந்த காரை விரட்டி சென்றுள்ளது. காரை மடக்கிப்பிடித்தபோது சம்பவம் பற்றி தெரியவந்தது. ஒருவன் தப்பியோடிய நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பலாத்காரத்துக்கு பயன்படுத்திய கார், குற்றவாளிகளில் ஒருவன் பணியாற்றும் கால்சென்டருக்கு சொந்தமானதாம்.
குற்றவாளிகள் பெயர், ரமேஷ், நரேந்திரா, ராகுல், சந்தீப் மற்றும் சூரஜ் என்று தெரியவந்துள்ளது. இதே ஏரியாவில்தான், அக்டோபர் மாதத்தில், 2 வயதேயான குழந்தையை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது.