அதிசயம், ஆனால் உண்மை...37 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு!
சஹாரா பாலைவனத்தில் கடந்த திங்கட் கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: சஹாரா பாலைவனத்தில் கடந்த திங்கள் கிழமை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 37ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள இந்த அற்புதத்தை புகைப்படக்காரர் ஒருவர் தனது கேமராவில் அழகாக படம் பிடித்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனம் உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனமாகும். மணல் பாலைவனத்தில் முதல் இடத்தில் உள்ள சஹாரா, பெரிய பாலைவன வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் பனிப் பாலைவனங்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. அவை குளிர் பாலைவனங்கள் ஆகும்.
94 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு
பரந்த மணற்பரப்பு, ஆங்காங்கே மணல் குன்றுகள், கொளுத்தும் வெயில் என தனக்கான அடையாளங்களை கொண்டுள்ளது சஹாரா பாலைவனம். 94 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது இந்த பாலைவனம்.
வெப்பத்திற்கேற்ற குளிர்
சஹாராவில் பகலில் எந்த அளவுக்கு வெப்பக் காற்று வீச வதைக்கிறதோ அதே அளவுக்கு இரவில் குளிர் காற்று வீசிக் கொண்டிருக்கும். சஹாராவில் வீசும் மணற் புயல்காற்றுதான் மிகவும் ஆபத்தான ஒன்று என கூறப்படுகிறது.
மாறும் பருவநிலை
சஹாராவின் பருவ நிலையை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கடந்த சில 100 ஆண்டுகளாக சஹாராவில் பருவ நிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
பசுமையாகும் பாலைவனம்
பருவநிலையில் இதுபோன்ற மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டால் அடுத்த 15000 ஆண்டுகளில் சஹாரா பாலைவனம் பசுமை பூமியாக மாறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சஹாரா பாலைவனம் பசுமையாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சஹாராவில் பனிப்பொழிவு
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில் சஹாரா பாலைவனமும் அதில் இருந்து தப்பவில்லை.
கடந்த திங்கட் கிழமை சஹாரா பாலைவனம் தனது அடையாளமான வெப்பத்தை இழந்து பனிப்பொழிவை சந்திள்ளது. எய்ன் செஃப்ரா, அல்ஜிரியா ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு நிலவியுள்ளது.
படர்ந்து கிடக்கும் பனிப்போர்வை
மணல் பரப்பு முழுவதும் பனிப்போர்வை பரந்து காணப்படுகிறது. இதனை கரிம் பவுச்சட்டடா என்பவர் தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார்.
37 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவு
37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சஹாரா பாலைவனத்தில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள்
தற்போது டுவீட்டரில் வெளியாகியுள்ளன.