ரேபரேலியில் சோனியா வேட்பு மனுத் தாக்கல்.. காரில் கூட்டி வந்தார் ராகுல்!
ரேபரேலி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் இன்று தனது மகன் ராகுல் காந்தியுடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மனுத் தாக்கல் செய்வதற்காக ரேபரேலிக்கு வந்த சோனியா காந்திக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
3 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பியாகியுள்ள சோனியா காந்தி தற்போது 4வது முறையாக இங்கு போட்டியிடுகிறார். மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு ஒரு யாகம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு பின்னரே மனுத் தாக்கல் செய்ய புறப்பட்டார் சோனியா காந்தி.
சோனியா காந்தியுடன் அவரது மகனும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தியும் வந்தார். சோனியா அமர்ந்திருந்த காரை ராகுலே ஓட்டி வந்தார். வழியெங்கும் சோனியாவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது கார் மீது ரோஜாப் பூக்களும் தூவப்பட்டன.
ரேபரேலியில் சோனியாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஜய் அகர்வாலை பாஜக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.