நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு சோனியா அழைப்பு
டெல்லி: தேர்தல் தோல்விகளைக் கண்டு துவளாமல், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதா ஏற்கனவே பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் , மத்திய பிரதேஷ், டெல்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அக்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சி உற்சாகத்துடன் தேர்தல் களம் இறங்கியுள்ளது.
இதேபோன்று காங்கிரசும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது. அடுத்த மாதம் (ஜனவரி) 17-ந்தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்தும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி மற்றும் பிரசாரம் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார்.
இதன் முதல் கட்டப் பணியாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் அவசரமாக கூட்டினார். கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், எம்.பி.க்களுக்கு பல்வேறு கட்டளை விதித்தார். அவர் பேசியதாவது:-

தயாராகுங்கள்...
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் நமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் மக்கள் தீர்பை ஏற்றுக் கொள்வோம். தோல்வியை கண்டு துவண்டுவிட வேண்டாம். அதில் இருந்து மீண்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும்.

நமது கடமை...
காங்கிரஸ் பல தேர்தல்களில் வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி மாறி சந்தித்து வந்துள்ளது. வெற்றியோ தோல்வியோ அதைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு பணியாற்றுவதே காங்கிரசின் தலையாய கடமை. எப்போதும்போல் நாம் நமது கடமையைச் செய்வோம்.

தோல்விக்கான காரணம்...
நாம் பல்வேறு சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். அவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் சொல்ல தவறிவிட்டோம். இதனால்தான் சட்டசபை தேர்தலில் நமக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. நம்மிடையே ஒற்றுமையும், ஒழுங்கீனமும் இல்லாததாலும் 4 மாநிலங்களிலும் தோல்வியைத் தழுவினோம்.

எதிர்க்கட்சிகளின் நோக்கம்....
நம்மை எதிர்க்கும் கட்சிகளைக் கண்டு பயப்படாமல் அவர்களின் கருத்துக்களுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு கொள்கை கோட்பாடுகள், குறிக்கோள்கள் எதுவும் கிடையாது. நமது மதசார்மின்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

நமக்கு மாற்றில்லை...
இதன் மூலம் அவர்கள் நோக்கமே நமது நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் வளர்ச்சியையும் தடுப்பதாக உள்ளது. நாம் நமது கொள்கைகளை உறுதியுடன் எடுத்துக்கூற எந்த நேரத்திலும் அஞ்சக்கூடாது. நமக்கு மாற்றாக யாரும் கிடையாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications