நாடாளுமன்றத் தேர்தல்: முதல் பிரச்சாரத்தை கேரளாவில் தொடங்குகிறார் சோனியா
திருவனந்தபுரம்: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தனது முதல் பிரச்சாரத்தை வரும் சனிக்கிழமை அன்று கேரளாவில் உள்ள கொச்சியில் துவக்க இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளும் முன்கூட்டியே பிரச்சாரக் கூட்டங்களை ஆரம்பித்து விட்டன. அந்தவகையில் பாஜக பிரதம வேட்பாளரான மோடி, ஒவ்வொரு மாநிலமாக தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல், காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தியும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவரான சோனியாகாந்தியும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை கேரளாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் சனிக்கிழமை அன்று கொச்சியில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்ற உள்ளார். அதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' எனக் கேட்டு கொண்டுள்ளார்.