கலவரம் பாதித்த முசாபர்நகரை பார்வையிடும் சோனியா, ராகுல் காந்தி
லக்னோ: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முசாபர்நகர் மாவட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அடுத்த வாரம் பார்வையிடுகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்த்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகருக்கு அடுத்த வாரம் வருகின்றனர். அவர்கள் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்யவிருக்கின்றனர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கலவரத்தை தூண்டிவிடுபவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்களை சும்மாவிடக் கூடாது. முசாபர்நகரில் கலவரத்தை தூண்டிவிட்டதில் குஜராத்தைச் சேர்ந்த பாஜகவினருக்கு பங்கு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாநில அரசு நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும். அவற்றை எப்படி நடத்துவது என்று மாநில அரசுக்கு தெரியாவிட்டால் அறிவுரை வழங்கப்படும்.
கடந்த 2002ம் ஆண்டில் இருந்து குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை என்று கூறுவது தவறு. 2002ம் ஆண்டுக்கு பிறகு கலவரத்தால் குஜராத்தில் 52 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications