பீகார் பாணியில் உ.பி.யிலும் உதயமாகுமா 'மகா கூட்டணி'? கை கோர்க்குமா சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்?
லக்னோ: பீகாரில் பா.ஜ.க.வை வீழ்த்த பரம வைரிகளாக இருந்த நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும் கை கோர்த்து சாதித்ததைப் போல உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் மகா கூட்டணியை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. பா.ஜ.க.வின் விஸ்வரூபமானது 2017ஆம் ஆண்டு நடைபெறும் உ.பி. சட்டசபை தேர்தலில் தொடர வேண்டும் என்பது அக்கட்சியின் வியூகமாக இருக்கும்.

ஏனெனில் 2016ஆம் ஆண்டு அஸ்ஸாம், கேரளா, தமிழகம், மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெரும் போராட்டத்தைத்தான் சந்திக்க நேரிடும்.. சாதித்துவிட முடியாது. ஆகையால் ஒரு பெரும் தொடர் தோல்விகளுக்குப் பின்னர் உத்தரப்பிரதேச சட்டசபை எதிர்கொள்ளும் பா.ஜ.க. வெற்றிக்கான அத்தனை வழிகளையும் மேற்கொள்ளும்.
இதனால் பாரதிய ஜனதாவை வீழ்த்த பரம எதிரிகளாக இருக்கும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் கை கோர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பீகாரி லாலுவும் நிதிஷூம் கை கோர்த்த போது இது தொடர்பான கருத்துகள் எழுந்தன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியோ, எங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு முலாயம்சிங் யாதவ் பகிரங்க மன்னிப்புகேட்க வேண்டும் என நிபந்தனை விதித்து அந்த அத்தியாயத்தையே முடித்து வைத்துவிட்டார்.
தற்போது பீகார் வெற்றியைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியுடன் கை கோர்க்க ஆளும் சமாஜ்வாடி கட்சி விரும்புவதாக தெரிகிறது. ஏனெனில் சமாஜ்வாடி கட்சி அரசு மீதான அதிருப்தி வாக்குகளை பகுஜன் சமாஜுடன் கை கோர்ப்பதன் மூலம் சமன் செய்துவிட முடியும் என்பது அக்கட்சியின் கணக்கு. இந்த மகா கூட்டணியை உருவாக்குவதற்கு விரும்புகிறோம் என்கிற வகையில் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பீகாரைப் போல மகா கூட்டணி உத்தரப்பிரதேசத்திலும் உருவாகும் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். லக்னோவில் நேற்றும் கூட செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், பகுஜன் கட்சியினர் மாயாவதியை சகோதரி என அழைக்கிறார்கள்... அவரை நான் அப்பாவின் சகோதரியாக (அத்தை) பார்க்கிறேன் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கை கோர்க்கப் போவதாக செய்திகள் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
ஆனால் இதை பகுஜன் சமாஜ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2017 சட்டசபை தேர்தலில் 403 சட்டசபை தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்; காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தள் போன்ற எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணியே கிடையாது என அக்கட்சி தொண்டர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது.
அதேபோல் மதச்சார்பின்மை என்ற பெயரால் மாயாவதியிடம் சரணாகதி அடையத்தான் வேண்டுமா என்ற அதிருப்தி குரலும் சமாஜ்வாடி கட்சியிலும் கூட எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications