இந்தியாவுக்கு டூர் வந்த ஸ்பெயின் பெண் கூட்டு பலாத்காரம்.. கணவர் முன்பே கொடூரம்! அதிர்ந்த ஜார்க்கண்ட்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே 10 பேர்கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வருகை தருவது வழக்கம். அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி வந்தனர். ஆசிய நாடுகளில் பைக்கில் சென்று தங்களுக்கு பிடித்தமான இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் வந்த இவர்கள் முதலில் பாகிஸ்தான் வந்தனர்.

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கும் சென்ற இந்த தம்பதி அங்கிருந்து வங்கதேசம் சென்றது. வங்கதேசத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களை சுற்றிப்பார்த்த பிறகு இந்தியாவுக்கு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி வருகை தந்தனர். இந்தியாவில் பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
குடில் அமைத்து தங்கினர்: பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி இரவு நேரத்தில் தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து தற்காலிக கொட்டகை அமைத்து அங்கேயே தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், தான் ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்திகா பகுதியில் ஸ்பெயின் சுற்றுலா தம்பதி, குடில் அமைத்து இரவு தங்கியுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் பெண்ணின் கணவரையும் இந்தக் கும்பல் தாக்கியுள்ளது. இதில் அவரும் காயம் அடைந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், வெளிநாட்டு பயணிகள் இருவர் சாலையோரம் கிடந்ததை கண்டுள்ளனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை: அவர்கள் இருவருக்கும் உள்ளூர் மொழி தெரியாது என்பதால்.. அவர்களுக்கு என்ன ஆனது என்பதை போலீசாரால் புரிந்து கொள்ள முடியவில்லை. காயங்களும் இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் இருவரையும் அனுமதித்தனர். அதன்பிறகுதான், ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்த கொடூரம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார், குற்றவாளிகளை முழு வீச்சில் தேடி வந்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதம் உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர்.
போலீசார் மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு: வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தாங்கள் வருகை தருவது தொடர்பாக முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தகவல் தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஸ்பெயின் நாட்டு தம்பதி தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, ஸ்பெயின் நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் பாஜக எழுப்பியுள்ளது.
சட்டமன்றத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ, கோட்டா அமித் மண்டால், வெளிநாட்டு பயணி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை ஹன்ஸ் திக போலீசார் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றவாளிகளுக்கு அரசியல் பின்னணி இருப்பதால் போலீசார் இப்படி நடந்து கொளவதாகவும் கூறினார். மேலும், மாவட்ட எஸ்.பியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.












Click it and Unblock the Notifications