கொரோனா.. ரூ30 ஆயிரம் கோடிக்கு ஒற்றுமையின் சிலை விற்பனைக்கு.. ஓஎல்எக்ஸ் விளம்பரத்தால் பரபரப்பு
காந்தி நகர்: குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலை ரூ 30 ஆயிரம் கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக ஓஎல்எக்ஸ் ஆன்லைன் தளத்தில் ஒரு விளம்பரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத்தில் நர்மதை ஆற்றங்கரையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ 3000 கோடியில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இது உலகின் மிக உயர்ந்த சிலையாக கருதப்படுகிறது.
இது 597 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலை அவரது 143 ஆவது பிறந்ததினத்தையொட்டி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூ 30 ஆயிரம் கோடி
அதன்படி இந்த ஒற்றுமையின் சிலையும் மார்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இந்த நிலையில் பழைய பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் ஓஎல்எக்ஸ்ஸில் இந்த சிலை விற்பனைக்கு என வந்த விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ 30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்வதாக வந்த தகவல் அந்த சிலையை பராமரிக்கும் அதிகாரிகளை அதிர செய்தது.
கொரோனா வைரஸ்
அந்த விளம்பரத்தில் , "அவசரம், கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொய்யானது என தெரியவந்ததை அடுத்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் அந்த விளம்பரத்தை நீக்கியது.
விளம்பரம்
எனினும் இதுகுறித்து தகவலறிந்த ஒற்றுமையின் சிலை நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒற்றுமையின் சிலை நிர்வாக உதவி ஆணையர் நிலேஷ் துபே கூறுகையில் அரசுக்கு அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் யாரோ ஒரு மர்ம நபர் இதுபோன்ற விளம்பரத்தை தந்துள்ளார்.
வழக்குப் பதிவு
அவர் விளம்பரம் கொடுத்ததற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓஎல்எக்ஸ் நிறுவனமும் இந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இதை பிரசுரித்துள்ளனர் என துபே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.