சு.சுவாமிக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்- சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு!
டெல்லி: அஸ்ஸாம் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு செய்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணியன் சுவாமி கடந்த மார்ச் 15-ந் தேதி கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். அவரது பேச்சு மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருந்ததாக கூறி அஸ்ஸாம் மாநில அரசு கரீம்கஞ்ச் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக உத்தரவிட்டு மார்ச் 19-ந் தேதி நீதிமன்றம் சம்மன் பிறப்பித்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து அஸ்ஸாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக சுப்பிரமணியம் சுவாமி நேற்று உச்சநீதிமன்றத்தை அணுகினார். நீதிபதிகள் பி.சி.பந்த், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் முன்பு அவர் முறையிட்டார். உரிய காலத்தில் மனு விசாரணைக்கு எடுக்கப்படுவதற்கு தேவையான நடைமுறைகளை செய்யுமாறு அவருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.