அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் கோர்ட்டில் ஆஜராகலை..சொல்கிறார் சஹாரா 'சுப்ரதா ராய்'
டெல்லி: தனது தயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் ஆஜராகவில்லை என்று ரூ20 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் உச்சநீதிமன்றத்தில் மருத்துவ சான்றிதழ் தாக்கல் செய்துள்ளார்.
பொதுமக்களிடம் சஹாரா குழுமம் முதலீடாக வசூலித்த ரூ20 ஆயிரம் கோடி மோசடி வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்த ஒரு உத்தரவையுமே சஹாரா குழுமம் நிறைவேற்ற தயாராக இல்லை.
அத்துடன் நேற்று உச்சநீதிமன்றத்தில் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இயக்குநர்கள் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் யாருமே ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து சுப்ரதா ராய்க்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில் தமது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாம் அருகிலேயே இருக்க வேண்டி இருப்பதாக தமக்கு சொந்தமான மருத்துவமனையிடம் இருந்து கடிதம் பெற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் சுப்ரதா ராய்.
இதனால் தாம் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சுப்ரதா ராய் கேட்டுக் கொண்டிருக்கிறார்.