மெஹருடன் தரூர் நெருங்கிப் பழகியதால் மனமுடைந்தார் சுனந்தா... வேலைக்காரர் வாக்குமூலம்
டெல்லி: தனது கணவர் சசி தரூரும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹரும் நெருங்கிப் பழகியதால் சுனந்தா மனமுடைந்து காணப்பட்டதாக அவரது வேலைக்காரர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா கடந்தாண்டு ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். சசிதரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹருக்கும் இடையில் ரகசிய உறவு இருப்பதாக டுவிட்டர் வாயிலாக சுனந்தா குற்றச்சாட்டு தெரிவித்த சில நாட்களில் சுனந்தா உடல் டெல்லி ஹோட்டல் அறையில் மீட்கப்பட்டது பரபரப்பை உண்டாக்கியது.
சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற குழப்பத்திற்கு ஓராண்டுக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைத்தது டெல்லி போலீஸ். கடந்த வாரம் சுனந்தா வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சுனந்தா கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், சுனில் என்ற நபர் சந்தித்ததாகவும், அவர்கள் இருவரும், நீண்ட நேரம் தனியாக இருந்ததாகவும், அதற்கு முந்தைய நாட்களில், சசி தரூரும், சுனந்தாவும் பல மணி நேரம் சண்டையிட்டதாகவும் சசி தரூரின் வேலைக்காரர் நாராயண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நாராயண் தனது வாக்குமூலத்தில் அளித்துள்ள மேலும் பல புதிய தகவல்களாவன:-
*கடந்த, 2010 அக்டோபர் முதல், சசி தரூர் வீட்டில் வேலை பார்க்கிறேன். கடந்த ஓராண்டாக இருவரும் பயங்கரமாக சண்டையிடுவது வழக்கம்.
*சுனந்தா இறந்ததாக கூறப்படும், 2014 ஜனவரி மாதம் 17க்கு, இரு நாட்களுக்கு முன்னதாக, டெல்லி லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அவருடன், சுனில் என்ற நபர் நீண்ட நேரம் தங்கி இருந்தார். அவர்களுடன், சுனந்தாவின் நண்பர்கள் சிலரும் வந்து சென்றனர்.
*அந்த நேரத்தில், சசி தரூர் டெல்லியில் தான் இருந்தார். எனினும், இருவரும் ஒன்றாக தங்கவில்லை. அடிக்கடி போனில் சண்டையிட்டுக் கொண்டனர்.
*சசி தரூருக்கு போன் செய்த சுனந்தா, 'சுனில் எல்லாவற்றையும் முடித்து விட்டார்' என, எக்காளமாக கூறினார். சசி தரூரின் மொபைல் போனில் இருந்த தகவல்கள், அவர் யாருக்கு போன் செய்தார், செய்தி அளித்தார் போன்ற விவரங்களை சுனந்தாவுக்கு சுனில் காப்பி செய்து கொடுத்திருக்கலாம்.
*ஜனவரி 17 காலை, சசி தரூர் எனக்கு போன் செய்தார். 'சுனந்தாவுக்கு உடல் நலம் சரியில்லை; சரியாக சாப்பிடவில்லை. அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறாள்; அவளை எழுப்பு' என, கூறினார். அதன்படி, படுக்கையறையில் கிடந்த சுனந்தாவை நான் எழுப்பினேன்; அவர் எழுந்திருக்கவில்லை. டாக்டரை அழைத்து வந்து பார்த்த போது, இறந்து விட்டதாக கூறினார்.
*இதற்கு முன், இருவரும், பல முறை பயங்கரமாக சண்டையிட்டனர். துபாயில் ஒருநாள், மதியம் துவங்கிய சண்டை, அதிகாலை 4:00 மணி வரை தொடர்ந்தது. அப்போது, சுனந்தா தாக்கியதில், சசி தரூரின் காலில் காயம் ஏற்பட்டது.
இவ்வாறு, பல திடுக்கிடும் தகவல்களை கடந்தாண்டு நவம்பர் மாதம் டெல்லி போலீசாரிடம் வேலைக்காரர் நாராயண் தெரிவித்து உள்ளார். இதனை அறிந்த சசி தரூர், டெல்லி போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில், 'என் வேலைக்காரரை அடித்து, உதைத்த போலீஸ் அதிகாரிகள், போலியாக வாக்குமூலம் வாங்கியுள்ளனர்' என குற்றம் சாட்டியிருந்தார். அந்த தகவல், இரு நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி, ''சுனந்தா கொலை விவகாரத்தில், இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியும்,'' எனக்கூறி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்.
போலீஸ் விசாரணையில் அதிருப்தி அடைந்திருக்கும் சசிதரூர், ''அரசியல் நிர்பந்தங்கள் இல்லாமல் விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும்,'' என ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications