ஜல்லிக்கட்டு வழக்கில் விசாரணை முடிந்தது- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டன. இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து விசாரணைகளும் உச்சநீதிமன்றத்தில் இன்று முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் தடை விதித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் 7.1.2016-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கியது. இதை எதிர்த்து விலங்குகள் நலவாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நாரிமன் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு வாதங்களை முன்வைத்தது.
இவ்வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, விலங்குகள் நல வாரியம் அனைத்தும் தங்களது இறுதி வாதங்களை முன்வைத்திருந்தன. பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் இன்று இவ்வழக்கில் ஆஜராகி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடினார்.
இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்ததால் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.