2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு: கனிமொழி மனு மீது 21–ந்தேதி விசாரணை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கனிமொழி எம்.பி. கைதாகி பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கனிமொழி கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘‘2ஜி ஒதுக்கீடு முறைகேடுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மேலும் அவர், ‘‘கலைஞர் தொலைக்காட்சியில் எனக்கு 20 சதவீத பங்கே உள்ளது. நான் அதன் இயக்குனர்களில் ஒருவராக 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை இரண்டு வாரமே இருந்தேன். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்தே 2009-ல் நிதி பரிமாற்றம் நடந்தது.
நான் எந்த காசோலையிலும் கையெழுத்து போட வில்லை. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லாததால் என்னை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.
கனிமொழி எம்.பி. மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இதுவரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கனிமொழியின் வக்கீல் அபிஷேக் சிங்வி அந்த மனு மீது விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து கனிமொழி மனு மீதான விசாரணை ஜனவரி 21-ந்தேதி நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் முடிவில்தான் 2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுவிக்கப்படுவாரா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications