டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
டிடிவி தினகரனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
Recommended Video

டெல்லி: டிடிவி தினகரனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதைத்தொடர்ந்து டிடிவி.தினகரன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
அதில், 'தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. மேலும் மாநிலத்தில் எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் இடைத்தேர்தலில் பயன்படுத்திய குக்கர் சின்னத்தை எங்களுக்கு நிரந்தரமாக ஒதுக்க வேண்டும். அதேபோல் எங்கள் அணி எந்தவித பெயரில்லாமல் செயல்பட்டு வருவதால் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ளது என்று கூறி மூன்று புதிய அணிகளின் பெயரை குறிப்பிட்டு அதில் ஏதாவது ஒன்றை ஒதுக்கீடு செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி, டிடிவி.தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் தினகரன் தெரிவித்துள்ள 3 அணிகளில் ஏதாவது ஒரு அணியை பரிசீலனை செய்தோ அல்லது புதிதாக ஏதாவது பெயர் தெரிவித்தால் அந்த பெயரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

சுப்ரீம்கோர்ட் தடை
இதனை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய டெல்லி ஹைகோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

3 வாரத்துக்குள்
இரட்டை இலை சின்னம் வழக்கில் இரு தரப்பும் கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கை 3 வாரத்துக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 நீதிபதிகள் அமர்வு
மேலும் இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தினகரன் தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications