கிரிமினல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீசுக்கு தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று, நீதிபதிகள் சி.கே.பிரசாத், ஜே.எஸ்.கெஹர் ஆகியோரை கொண்ட பெஞ்சில் நேற்று நடைபெற்றது. அந்த விசாரணையின்போது, போலீசார் மேற்கொள்ளும் மோசமான விசாரணையினால் நாடு முழுவதும் பல கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகளின் விடுதலை அதிகரித்து வருகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதுபோன்ற வழக்குகளில், குற்றவாளிகளின் விடுதலைக்கு காரணமாக தவறு செய்யும் விசாரணை அதிகாரிகளுக்கு (போலீஸ் அதிகாரிகள்) தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தங்களது தீர்ப்பில், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், அப்பாவிகள் மீது வழக்கு தொடராமல் இருக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிப்பதற்கு 6 மாதங்களில் புதிய அமைப்பு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலையாகும்போது நீதி வழங்கும் முறை தோல்வி அடைவதை புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு விடுதலையும், தவறான நபர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் வழக்குகளின் தீர்ப்புகளை ஒவ்வொரு மாநில அரசுகளின் உள்துறையும் தீவிரமாக ஆய்வு செய்து அந்த வழக்கு தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மற்றும் நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணையின்போது நடந்த தவறுகள் என்ன என்பதையும் அதற்கு காரணமான அதிகாரிகளையும் கண்டறிந்து, அவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications