லுக்அவுட் நோட்டீஸ் தொடரும்.. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை: உச்சநீதிமன்றம்
டெல்லி: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்பது சிபிஐ குற்றச்சாட்டு.
இது தொடர்பான விசாரணைக்கு அழைத்தும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதனால் தேடப்படும் நபர் என்கிற லுக் அவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்தது. இதனால் கார்த்தி வெளிநாடு செல்வதற்கு தடை ஏற்பட்டது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை பெற்றார் கார்த்தி. அத்துடன் வரும் 16-ந் தேதி வெளிநாடு செல்லவும் கார்த்தி சிதம்பரத்தை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்தது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது சரிதான் என்றும் லுக்அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 11ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு தொடரும்.