காவிரி .. கர்நாடக சட்டசபையில் எந்த அடிப்படையில் தீர்மானம் போட்டீர்கள்... சுப்ரீம் கோர்ட் கடும் சீறல்
டெல்லி: காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் கடந்த 23ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில், விசாரணைக்கு, வந்தபோது, இந்த தீர்மானம் குறித்து தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, கேள்வி எழுப்பினார். கர்நாடகா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து கர்நாடக தரப்பிடம் நீதிபதி தீபக் மிஸ்ரா சரமாரி கேள்வியை எழுப்பினார். எந்த சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள்? தமிழகத்துக்கு 7 நாட்களுக்கு, வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தோம். அதை எப்போது நிறைவேற்றுவீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் கவுரவத்தை கர்நாடகா மதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
அதற்கு கர்நாடக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன், கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் இருப்பதால் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்துக்கு தேவைப்படும் தண்ணீரை வழங்குகிறோம் என்றார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
கர்நாடக எம்.பிக்களான சந்திரப்பா, முத்த ஹனுமே கவுடா, சுரேஷ் கவுடா, பிரகாஷ் ஹுக்கேரி, ராஜிவ் கவுடா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் அமர்ந்து வழக்கை நேரில் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.