கலிங்கப்பட்டியில் டாஸ்மாக்கடையை மூடியது சரிதான்.. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடியது தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நிதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூட ஊராட்சி மன்றம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த வை. ரவிச்சந்திரன் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.எஸ் கெஹர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாஸ்மாக்கை மூட உத்தரவிட ஊராட்சி மன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்ததோடு, கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூட ஊராட்சி மன்றம் எடுத்த முடிவு சரியே என்று கூறியுள்ளது. பின்னர், தமிழக அரசு செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.