வங்கதேச பயணம்: மேற்கு வங்க முதல்வருடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை!
டெல்லி: தமது வங்கதேச பயணத்தை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வங்கதேசம் செல்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறுவோர் குறித்து அஸ்ஸாம் மாநில அரசுடன் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தி இருந்தார். மேலும் வங்கதேசத்தில் இருந்து மேகலாயாவின் ஷில்லாங் வழியே அஸ்ஸாமுக்கு பேருந்து போக்குவரத்தை இயக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தீஸ்தா நதிநீர் விவகாரம், எல்லை விவகாரங்கள் குறித்து மமதாவுடன் சுஷ்மா விவாதித்தார்.
2011ஆம் ஆண்டு முந்தைய பிரதமர் மன்மோகன்சிங், வங்கதேசம் பயணம் மேற்கொண்ட போது தீஸ்தா நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் செல்ல மமதா பானர்ஜி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications