நல்லது செய்தும் சர்ச்சில் தோற்றது மாதிரி ராஜபக்சே தோல்வி: இது சு.சாமி கருத்து
டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேன போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்துள்ளார். தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் ஸ்ரீசேனவுக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து வெற்றி பெற காரணமாக இருந்த சர்ச்சிலும், இந்தியாவில் அதிசயம் நிகழ்த்திய பிவிஎன் ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் சர்ச்சில். பி.வி. நரசிம்மராவ் இந்தியாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இவ்வளவு செய்தும் அவர்கள் 2 பேரும் தேர்தலில் தோல்வி அடைந்தனர். இந்நிலையில் சாமி நல்லது செய்தும் ராஜபக்சே தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது போன்று தெரிவித்துள்ளார்.