மோடி கண்டனம் தெரிவித்தும் அடங்க மறுக்கும் சு.சுவாமி... ஜிடிபி குறித்து பரபரப்பு கிளப்புகிறாராம்!
டெல்லி: சுயவிளம்பரம் தேட முயற்சிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்த பின்னரும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த உண்மையை வெளியிட்டால் பெரும் பரபரப்பு ஏற்படும் என எச்சரித்திருக்கிறார் சு.சுவாமி.
ராஜ்யசபா எம்பியாக சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்பட்ட 2 மாதங்களிலேயே மத்திய அரசுக்கு பெரும் குடைச்சல் தருபவராக உருவெடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி. மத்திய நிதி அமைச்சர் பதவியை எப்படியாவது கைப்பற்றுவது என்ற வியூகம் வகுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ்.. கடைசியாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி என அனைவரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தார் சு.சுவாமி.
இதற்கு பதிலடியாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சு.சுவாமியின் பெயரை குறிப்பிடாமல் சுயவிளம்பரம் தேடவேண்டாம் என கண்டனம் தெரிவித்திருந்தார். இதன்பின்னர் ஓரிரு நாட்கள் அமைதியாக இருந்த சு.சுவாமி மீண்டும் ரணகளப்படுத்த தொடங்கி இருக்கிறார்.
If I apply Samuelson-Swamy Theory of Index Numbers to India's GDP calculation or RBI interests rates, media will scream anti party activity!
— Subramanian Swamy (@Swamy39) July 1, 2016
இன்று தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் தாம் நாட்டின் உண்மையான உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) குறித்த தகவலை வெளியிட்டால் பெரும் பரபரப்பு ஏற்படும் என எச்சரித்திருக்கிறார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த போக்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் அதிருப்தி அடைய வைத்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.