கடலை மிட்டாய் சாப்பிடுங்கள்... தோல் பளபளக்கும்... தமிழிசை சவுந்தரராஜன் விழிப்புணர்வு வீடியோ
தெலங்கானா: செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து விழிப்புர்ணவு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலை மிட்டாயின் நன்மைகள் பற்றி விவரித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
கடலை மிட்டாயில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டுள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

செப்டம்பர் மாதம்
செப்டம்பர் மாதத்தை பொறுத்தவரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் கருப்பட்டி குறித்தும் கடலை மிட்டாய் பற்றியும் விவரித்துள்ளார்.

கடலைமிட்டாய் அருமை
கடலைமிட்டாயை பொறுத்தவரை உடலுக்கு அபரிமிதமான நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப்பொருள் என்றும் இது எளிதாக கிடைப்பதால் பலரும் அதன் அருமையை உணர்ந்துள்ளார்கள் என தமக்கு தெரியவில்லை எனவும் கூறியிருக்கிறார். வேர்கடலையுடன் சேர்க்கப்படும் வெள்ளப்பாகுவில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் இருப்பதால் உடலை இளைமையாக வைத்துக் கொள்ள அது உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இதயத்தை பாதுகாக்கும்
மேலும், கடலை மிட்டாய் மூலம் கிடைக்கும் மருத்துவப் பயன்களை பற்றி அறிந்தால் அனைவரும் அசந்துபோவீர்கள் என்றும் அந்தளவிற்கு அதில் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் மிகுந்துள்ளதாக கூறியுள்ளார். நரம்பு மண்டலத்திற்கு வலிமை சேர்ப்பதுடன் மறதியை குறைக்கும் ஆற்றம் கடலை மிட்டாய்க்கு உள்ளதாக விவரித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இதயத்தை பாதுகாக்கும் ஆற்றல் கடலைமிட்டாய்க்கு உள்ளதாக கூறியிருக்கிறார்.

அமினோ அமிலம்
எல்லாவற்றுக்கும் மேலாக தோல் பளபளப்பாக இருப்பதற்கு கடலை மிட்டாயில் உள்ள ஜிங்க், விட்டமின் -இ, அமினோ அமிலம் உள்ளிட்ட பொருட்கள் பெரிதும் உதவிக்கரமாக இருக்கும் என்றும் குழந்தைகளுக்கு நாள்தோறும் கடலை மிட்டாய் கொடுத்து வந்தால் அது அவர்களின் வளர்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவு கொடுப்பதை போல் கடலை மிட்டாயும் கொடுக்கலாம் என்பது தமது யோசனை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications