20 தமிழர் படுகொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் விசாரணை- ஆந்திரா போலீஸுக்கு சம்மன்!!
திருவனந்தபுரம்: 20 தமிழர் படுகொலை குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் ஆய்வு செய்ய இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆந்திரா போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்தியதாக கடந்த 7-ந் தேதி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான வழக்கில் ஆந்திரா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ்
ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தற்போது மனித உரிமைகள் ஆணையம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
22-ந் தேதி விசாரணை
வருகிற 22-ந்தேதி ஆந்திராவில் இந்த விசாரணை தொடங்குகிறது. இதில் ஆஜராகுமாறு ஆந்திர போலீசாருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
கே.ஜி.பாலகிருஷ்ணன் பேட்டி
இதுபற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
ஆந்திரா வனப்பகுதியில் சட்ட விரோதமாக செம்மரம் வெட்டினார்கள் என்று கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும், தெலுங்கானா மாநிலம் நளகொண்டாவில் 5 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்துகிறது.
இதற்கான கூட்டம் ஆந்திராவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வருகிற 22-ந்தேதி விசாரணை தொடங்குகிறது. துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஆணையம் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்படும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications