பாலியல் தொந்தரவு - டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் தற்காலிக பதவி விலகல்
பிரபல புலனாய்வு இதழான டெஹல்காவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால். இந்த இதழின் சார்பாக கோவாவில் நடைபெற்ற விழா ஒன்றில் சக பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தருண் தேஜ்பால் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து டெஹல்கா நிர்வாகத்துக்கு அப்பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருக்கிறார். தருண் தேஜ்பாலின் மகள் வயதிருக்கும் தம்மிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக அப்பெண் பத்திரிகையாளர் குமுறியிருக்கிறார். எத்தனையோ முறை தருண் தேஜ்பால் தொந்தரவு கொடுத்தும் அதற்கு உடன்பட மறுத்த நிலையில் தொடர்ந்து தொந்தரவு செய்தார் என்பது அப்பெண்ணின் புகார்.
இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்ற நிலையில் திடீரென, நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரிக்கு தருண் தேஜ்பால் மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தன்னுடைய முறைகேடான நடத்தைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அத்துடன் தாம் மேற்கொண்ட தவறுக்காக ஆசிரியர் பொறுப்பில் இருந்து 6 மாத காலம் விலகிக் கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
தருண் தேஜ்பாலின் இந்த மின்னஞ்சல் அனைத்து பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சோமா செளத்ரி, இது எங்கள் நிறுவன உள்விவகாரம் சம்பந்தப்பட்ட பெண் இந்த நடவடிக்கையில் திருப்தி அடைந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரோ, தருண் தேஜ்பால் தம்மை காப்பாற்றிக் கொள்ளவே இப்படி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். டெஹல்கா நிர்வாகம் ஒரு கமிட்டியை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.