களேபரமான நாடாளுமன்றம்.. கத்தியுடன் வந்த எம்பி, மிளகுபொடியால் எம்பிக்கு ஹார்ட் அட்டாக்!
டெல்லி: மக்களவையில் தெலுங்கான விவகாரத்தில் களேபரம் நடந்தபோது மயங்கி விழுந்த தெலுங்குதேசம் எம்.பி. கொனகல்ல நாராயணராவ் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை இன்று மதியம் கூடியம் தெலுங்கானா மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தெலுங்கானா கோரிக்கைக்காக அவைக்குள் வந்த மசூலிப்பட்டிணம் எம்.பி. நாராயணராவ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து உடனடியாக அவரை டெல்லி ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்களவையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி ராஜகோபால் மிளகு பொடியை தூவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் நாராயணராவும் ஒருவர். மிளகுப் பொடியினாலேயே திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், அவர் விஷம் அருந்தியதாகவும் தகவல்கள் வருகின்றன.
கத்தியுடன் வந்த எம்பி:
இதற்கிடையே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நர்சராவ் பேட்டை எம்பி மொதுகுல வேணுகோபால் ரெட்டி கத்தியுடன் வந்து நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அது கத்தி இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் மைக்கை உடைத்ததில் அதன் கைப்பிடி தான் கத்தி மாதிரி மற்றவர்களுக்கு தெரிந்ததாகவும் ரெட்டி கூறினார்.
மொத்தத்தில் இன்று நாடாளுமன்றத்தை அசிங்கப்படுத்தி நாறடித்துவிட்டது தெலுங்கானா விவகாரம்.