பள்ளியில் சிறுமி பலாத்காரம்: கைதான ஆசிரியர் நிர்வாண பட மாஃபியாவை சேர்ந்தவரா?
பெங்களூர்: பள்ளியில் ஆறுவயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மாஸ்டரின் லேப்-டாப்பில் இருந்து சிறுமிகளின் ஆபாச படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை வைர்த்து பார்க்கும்போது, காமக்கொடூரனான அந்த ஆசிரியர் நிர்வாண படங்களை விற்று சம்பாதிக்கும் மாஃபியா கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சிறுமி பலாத்காரம்
பெங்களூர் மாரத்தஹள்ளி பகுதியிலுள்ள பள்ளியொன்றில் படிக்கும் ஆறுவயது சிறுமி, கடந்த 2ம்தேதி பள்ளி வளாகத்திற்குள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். தாமதமாக இந்த விவகாரம் கடந்த வாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து வர்த்தூர் காவல் நிலையத்தில், சாப்ட்வேர் இன்ஜினியரான, சிறுமியின் தந்தை, புகார் பதிவு செய்தார்.
பெற்றோர் ஆர்ப்பாட்டம்
போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், பள்ளியில் படிக்கும் பிற மாணாக்கர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு பொருட்களை அடித்து உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், குற்றவாளியை கைது செய்யும்வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று ஒட்டுமொத்தமாக முடிவு செய்தனர். மகளிர் அமைப்புகளும், குழந்தைகள் நலன்சார் சங்கங்களும் பெங்களூர் வீதிகளில் போராட்டத்தில் குதித்ததன.
அரசியல் நெருக்கடி
அண்மை காலமாக பெண்களுக்கு எதிராக பெங்களூரில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காண்பித்து, கர்நாடக எதிர்க்கட்சிகளும் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பதவி விலக கோரி, போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டிய நெருக்கடி காவல்துறைக்கு ஏற்பட்டது.
அடையாளம் காண்பதில் சிக்கல்
சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின்போது, பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியந்தது. இருப்பினும் பலாத்காரம் செய்ததாக, சிறுமி கூறிய அடையாளங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பொருந்திப்போனதால், குற்றவாளியை கைது செய்வதில், சிக்கல் நிலவியது, இந்நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, பள்ளியின் ஸ்கேட்டிங் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண் குழந்தைக்கு தந்தை
கைது செய்யப்பட்ட ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பெயர் முஸ்தபா என்ற முன்னா. பீகார் மாநிலத்தின் தர்பங்கா பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தையுள்ளது. பெங்களூரின் ஒயிட்பீல்டு பகுதியிலுள்ள ஒருபள்ளியில் இதற்கு முன்பு வேலை பார்த்தபோது, அங்கு படித்த சிறுமியையும் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தெரிந்ததும், பள்ளி நிர்வாகம் அவரை வேலையை விட்டு விரட்டியடித்தது. ஆனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை.
விசாரிக்காத பள்ளி நிர்வாகம்
இந்நிலையில்தான் மாரத்தஹள்ளியிலுள்ள பள்ளியில் முஸ்தபா வேலைக்கு சேர்த்தார். வேலைக்கு சேர்க்கும் முன்பாக இந்த பள்ளி நிர்வாகம் அவரது பின்புலத்தை விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சிறிது காலம் ஒழுங்காக வேலை பார்த்துவிட்டு, இந்த பள்ளியிலும் மீண்டும் தனது கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளார் இந்த காமகொடூரன். அப்போது அவரது கைக்கு சிக்கியவர்தான் 6 வயது சிறுமி.
சிறுமிகளின் நிர்வாணப்படம்
முஸ்தபாவின் லேப்-டாப்பை பரிசோதித்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த லேப்-டாப்பில் சிறுமிகளின் நிர்வாண படங்கள் குவிந்து கிடக்கின்றனவாம். இவையெல்லாம் தற்போது அவர் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் சிறுமிகளின் படங்களா அல்லது, முன்பு வேலை பார்த்த பள்ளியில் படித்த சிறுமிகளா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். மேலும், இப்படிப்பட்ட நபரை வேலைக்கு சேர்த்த பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
மாஃபியா கும்பலை சேர்ந்தவரா?
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் "ஸ்கேட்டிங் மாஸ்டருக்கு மாத சம்பளம் ரூ.18 ஆயிரம்தான். ஆனால் அவரிடம் 2 லேப்-டாப், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளன. எனவே சிறுமிகளை நிர்வாணமாக படம் பிடித்து பெற்றோரிடம் மிரட்டி பணம் பறித்து முஸ்தபா, உல்லாச வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அல்லது ஆபாச பட வெப்சைட்டுகளுக்கு இப்படங்களை அனுப்பி அதில் பணம் சம்பாதித்திருப்பார் என்று சந்தேகிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
பள்ளிக்கு நெருக்கடி
ஆபாச பட மாஃபியா கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் வேலை அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று பெற்றோர் குமுறுகிறார்கள். மேலும், பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது என்று விளக்கம் கேட்டு கர்நாடக மாநில துவக்க கல்வித்துறை குறிப்பிட்ட அந்த பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்பள்ளியில் செல்வந்தர்களின் குழந்தைகள் படிப்பதும், பள்ளிக்கு மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கிளைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தடியடி
சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக பாஜகவின் கிளையான ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் பள்ளி அருகே போராட்டம் நடத்தினர். பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாமல் இருக்க போலீசார் தடுப்புகளை வைத்து மறித்தனர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் அமைத்த தடுப்புகளை தூக்கி எறிந்து அதை உதைத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதனால் பள்ளியை சுற்றிலும் உள்ள பகுதிகள் போர்க்களம்போல காட்சியளித்தது.