"இலை"யைப் பிடிச்சே தீரணும்.. சசிகலா புஷ்பாவையும் விடலை எடப்பாடி கோஷ்டி.. அதிரடி பேச்சுவார்த்தை!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவை எடப்பாடி கோஷ்டி இன்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
டெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவுடனும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் சசிகலா புஷ்பா தரப்பு மல்லுக்கட்டுவதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் எடப்பாடி கோஷ்டி திடீரென இரட்டை இலை மீட்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது.
சசிகலா புஷ்பா
ஓபிஎஸ் கோஷ்டி கடும் நிபந்தனைகளை விதித்து வரும் நிலையில் எல்லாவற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என பம்முகிறது எடப்பாடி கோஷ்டி. இந்த நிலையில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் சசிகலா புஷ்பாவையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை எடப்பாடி கோஷ்டி மேற்கொண்டிருக்கிறது.
யார் யார்?
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரும் மாவட்ட செயலர் ஒருவரும் டெல்லியில் இன்று காலை சசிகலா புஷ்பாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது, சசிகலாதான் உங்களுக்கு எதிராக இருந்தார். இப்போது அவர்களது குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டோம்தானே.. நீங்க அமைதியாக இருக்கலாமே என சமாதானப்படலத்தை எடப்பாடி கோஷ்டி தொடங்கியிருக்கிறது.
உடன்பாடு இல்லை
ஆனால் சசிகலா புஷ்பாவோ, தொடக்கம் முதலே நான் மட்டுமே அவர்களை எதிர்த்து வருகிறேன்... நீங்கள் எல்லாம் அடிமைகள் போல இருந்தீர்களே... நான் தொடர்ந்தும் அவர்களுக்கு எதிராக பேசுவேன் என கொதித்திருக்கிறார். இருப்பினும் இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதையடுத்து நிபந்தனைகள், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. டெல்லியில் முகாமிட்டுள்ள எடப்பாடி கோஷ்டியினர் இரட்டை இலையை மீட்பதற்கான லாபிகளில் படுதீவிரமாக உள்ளதாம்.