போலீசாரின் அலட்சியம்.. மீண்டும் பலாத்காரத்திற்கு ஆளான மும்பை சிறுமி!
மும்பை: மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கும்பல் போலீஸாரின் அலட்சியம் மற்றும் முட்டாள்தனம் காரணமாக மீண்டும் ஒருமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்நது சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமீபத்தில் அவரது காதலரும், அவனது நண்பனும் சேர்ந்து ஒரு இடத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அந்தச் சிறுமி வைத்திருந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு, அவரை விரட்டி விட்டனர்.
மீண்டு வந்த அச்சிறுமி தனது தாயாரிடம் இதைச் சொல்ல, அவர் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் எஜ்ஜப்பவார் என்பவர், மீண்டும் அவர்கள் வருவார்கள், வரும்போது பிடித்துக் கொள்ளலாம் என்று கேஷுவலாக கூறி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் பெண்ணின் தாயாருக்குப போன் செய்த குற்றவாளிகளில் ஒருவர் தாங்கள் சொல்லும் இடத்திற்கு உங்களது மகள் வந்தால் போனைத் தருவதாகவும், தங்களுக்கு ரூ. 2000 பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் அங்கு போயுள்ளார். அப்போது இரண்டு பேரும் சேர்ந்து அச்சிறுமியை மீண்டும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விட்டுச் சென்று விட்டனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.