தாலியை கழட்டிட்டு தேர்வு எழுதுங்க.. தெலுங்கானாவில் நடந்த அக்கப்போர்!
தெலங்கானாவில் தேர்வு மையத்தில் தாலியை கழற்றுமாறு அதிகாரிகள் கெடுபிடி செய்தனர்.
தெலங்கானா: எதுக்குமே ஒரு எல்லை வேண்டாமா? வரைமுறை வேண்டாமா?
தாலியை கழட்டினால்தான் தேர்வு எழுத அனுமதிப்போம்-னு எங்காவது கெடுபிடி செய்வார்களா? அதையும் நடத்தி காட்டியுள்ளது தெலங்கானா மாநிலம்.
தெலங்கானா மாநிலத்தில் 700 வருவாய் கிராம அதிகாரிகள் பணிக்காக தேர்வு நடைபெற்றது. 10 லட்சம் பேர் இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் இந்த தேர்வு எழுத பட்ட பாடு இருக்கிறதே? இதில் மிக மிக கேவலமான உத்தரவுகள் கையாளப்பட்டிருக்கிறது.
ஏகப்பட்ட கெடுபிடிகள்
தேர்வு எழுதுவோர், ஷீ, முழுக்கை சட்டை போடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல, நகைகள், வாட்ச், செல்போன், போன்றவை பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லிவிட்டார்கள். பெண்களோ, தலையில் கிளிப், கழுத்தில் நகைகள் அணிந்திருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள், (இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரியும், பார்த்த மாதிரியும் இருக்கிறதா?)
கழுத்தில் தாலி
அதன்படியே எல்லா சோதனையும் செய்யப்பட்டு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் ஏராளமான கல்யாணமான பெண்கள் வந்திருந்தனர். அதில் மேடக், மகபூப்நகர், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் இந்து பெண்களும் நிறைய பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்கள் தங்கள் முறைப்படி கழுத்தில் தாலியை மட்டும் அணிந்திருந்தனர்.
தாலியை கழட்டுங்கள்
இதைப்பார்த்த அதிகாரிகள் தாலியை கழற்றுங்கள் என்று பெண்களிடம் சொன்னார்கள். ஆனால் பெண்களோ தயங்கிபடியே நின்றார்கள். என்றாலும் அதிகாரிகள் விடவேயில்லை. "தாலியைக் கழட்டி உங்க கூட வந்திருப்பவர்களிடம் கொடுத்துவிட்டு அதுக்கப்புறம் தேர்வு எழுத உள்ளே வாருங்கள்" என்று மைய அதிகாரிகளோ கறாராக சொல்லிவிட்டார்கள்.
கெஞ்சிய பெண்கள்
பெண்களோ அதிகாரிகளிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு இது புனிதமானது, இதில நாங்க என்ன செய்ய போறோம்? இப்படியெல்லாம் தாலியை கழட்டுவது எங்களுக்கு ஆகாத ஒன்று. தயவு செய்து தாலியை மட்டும் விட்டுவிடுங்கள்" என்றார்கள். அதிகாரிகளிடம் இது எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. தேர்வு நேரமோ போய்க் கொண்டே இருக்கிறது. பெண்களுடன் தேர்வு மையம் வந்திருந்த அவர்களின் கணவன்மார்கள், அண்ணன்-தம்பிகள் உள்ளிட் உறவினர்கள் எல்லோருமே என்ன செய்வதென்று திருதிருவென விழித்தார்கள்.
அழுதபடியே கழட்டினர்
கடைசியில் பெண்கள், அழுது கொண்டே தங்கள் தாலி செயினை கழட்டி கணவன்மார்கள், உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத உள்ளே போனார்கள். மனைவிமார்கள் இப்படி அழுது கொண்டே தேர்வு எழுத சென்றதை பார்த்த கணவன்மார்கள் அந்தந்த தேர்வு மையங்கள் முன்பு தாலியை கையில் பிடித்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி வலுக்கட்டாயமாக தாலியை கழட்டியது கண்டு சில இடங்களில் தேர்வு மைய அதிகாரிகளுடன் பெண்களுக்கு வாக்குவாதமும் நடைபெற்றது. நார்சபூரில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 290 தாலிகள் கழட்டப்பட்டுள்ளன.
மறக்க முடியாத மூக்குத்தி
எல்லாத்துக்கும் காரணமே இந்த நீட் தேர்வுதான். நீட் தேர்வின்போது இதேபோலதான் கொடுமை நடந்தது. மாணவியர் ரொம்பவே சித்திரவதைக்கு உள்ளாகி போனார்கள். நீட் தேர்வு சோதனையின் மூக்குத்தியை கூட விட்டு வைக்காததை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை. இப்படிப்பட்ட தேவையற்ற கெடுபிடிகளை மக்கள் முன் கொண்டு வந்து கொட்டியதே மத்திய அரசுதான்.
மோசமான முன்னுதாரணம்
அன்றைய நீட் தேர்வு சோதனைகளை நாகரீகமான முறையிலும், நியாயமான முறையிலும் நடத்தி இருந்தால், இன்று தெலங்கானா இந்த யுக்தியை கையாளுமா? இப்படிப்பட்ட மோசமான தேர்வு கெடுபிடிகளுக்கு மத்திய அரசே மோசமான முன்னுதாரணமாக உள்ளது. இப்படியே நாடு முழுவதும் ஆளாளுக்கு கெடுபிடி என்ற பெயரில் எல்லை மீறி போனால் நாடு என்னாவது?
மனித உரிமை மீறலே
இந்துக்களுக்கு பாரம்பரியம் என்று ஒன்று உள்ளது. நடைமுறை என்று காலங்காலமாக உள்ளது. அதையும் நாசமாக்கிவிட்டு, பெண்களின் மனதையும் புண்படுத்திவிட்டு அப்படியென்ன விதிமுறைகளை பின்பற்றுவது? இத்தகைய செயல்களை விதிமுறை என்று சொல்லக்கூடாது, மனித உரிமை மீறல் என்றுதான் சொல்ல வேண்டும்!