தெலுங்கானாவில் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் பலி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டில் பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சோம்லகட்டா அருகே உள்ள கரீம்நகர்-கம்மம்-வாரங்கல் கமிட்டி காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். காட்டுப்பகுதியில் நடந்த கடும் துப்பாக்கிச்சூட்டில் பெண் உள்பட இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் தரப்பில் உயிர் இழப்பு எதுவும் இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.