தூக்கில் தொங்கிய ‘கபாலி’ பட தயாரிப்பாளர்! ஷாக்கான திரையுலகம்! போதை பொருள் கடத்தல் காரணமா? அதிர்ச்சி
பானஜி: ரஜினிகாந்த் நடிப்பில் 2016இல் வெளியான கபாலி திரைப்படத்தின் தெலுங்கு தயாரிப்பாளரான கே.பி.சவுத்ரி கோவாவில் தங்கி இருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர் போலீசார். இவர் போதைப் பொருள் விற்றதாக கடந்த 2023ஆம் ஆண்டு கைதானது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி திரைப்படம் வெளியானது. பெரும் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படத்தை தெலுங்கில் தயாரித்து பிரபலமானவர் கேபி சவுத்ரி.

கோவாவில் உள்ள சீயோலின் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் அவர் வசித்து வந்தார். இந்த நிலையில் நீண்ட நேரமாக அவர் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதை அடுத்து சந்தேகம் அடைந்த அருகில் இருந்தோர் வீட்டில் சென்று பார்த்தபோது கேபி சவுத்ரி தூக்கில் இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கே.பி. சவுத்ரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
இதுதொடர்பாக பேசி உள்ள கோவா காவல்துறை கண்காணிப்பாளர் அக்ஷத் கவுசல், கே பி சவுத்ரியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருப்பதாக அருகில் இருந்து சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக சீயோலின் புறக் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனேயே அஞ்சுனா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டுள்ளனர். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான விவரங்கள் சரியான நேரத்தில் உங்களுக்கு தரப்படும் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த கே.பி. சௌத்ரி கடந்த சில வருடங்களாக படங்கள் எதையும் தயாரிக்கவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கு தொடர்பாக சைபராபாத் போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் மற்றும் கோவாவில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக கேபி சவுத்ரி கைது செய்யப்பட்ட நிலையில், கடன் பிரச்சினை அல்லது வழக்கு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications