தாத்ரி சம்பவத்துக்கு பழிவாங்க தீவிரவாதிகள் பயங்கர சதி - உளவுத்துறை 'வார்னிங்'
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி வதந்தியால் இஸ்லாமிய முதியவர் இக்லாக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பழிவாங்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக கூறி, முகமது இக்லாக் என்ற இஸ்லாமிய முதியவர் மதவெறி கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பழிவாங்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
அலகாபாத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாத்ரி சம்பவத்துக்குப் பழிவாங்க, உத்தரபிரதேச சட்டசபை, அலகாபாத் உயர்நீதிமன்றம், முன்னாள் ராணுவ வீரர்களின் குடியிருப்புகள் மீதும் தீவிரவாதிகள் தங்களது ஸ்லீப்பர் செல்கள் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை தீவிரவாதிகள் சீர்குலைக்கலாம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.