குடியரசு தினத்தையொட்டி பள்ளிகள், பொது இடங்களை தீவிரவாதிகள் தாக்கலாம்: எச்சரிக்கும் ராணுவம்
டெல்லி: குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரவிருக்கும் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ராணுவம் எச்சரித்துள்ளது.
குடியரசுத் தின விழாவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று ராணுவம் எச்சரித்துள்ளது.
இது குறித்து லெப்டினென்ட் ஜெனரல் கே.ஹெச். சிங் கூறுகையில்,
அமெரிக்க அதிபர் வருகையையொட்டி தீவிரவாதிகள் பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை தாக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. சுமார் 200 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ பிர் பஞ்சால் ரேஞ்சில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக நிலைமை கட்டுக்குள் உள்ளது.
அவர்கள் ஊடுருவ நினைத்தால் நம் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். எதையும் சந்திக்க தயாரான நிலையில் இந்திய ராணுவம் உள்ளது என்றார்.
இந்நிலையில் 2 முதல் 3 லஷ்கர் இ தொய்பா தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர் என்றும், அவர்களை உளவுத் துறை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.