ஜெ. குணமடைய வேண்டி ஹரித்துவார், கேதார்நாத் கோவில்களில் தருண் விஜய் சிறப்பு வழிபாடு
டேராடூன்: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார் கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் நலம் பெற வேண்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய், ஹரித்துவார் கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவரின் புகழ் நாடு முழுவதும் பரவுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவி பேருதவியாக இருந்தது. அவரது உதவி மூலம் எங்களுக்கு அங்கீகாரமும் கிடைத்தது.
இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்காக ஹரித்துவார் கங்கா கோவில் மற்றும் கேதர்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.